சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் சேர, 3,768 பேர் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வை, விரைவில் துவங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

தமிழத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 296 இடங்கள் உள்ளன. இதுதவிர 20 சுயநிதி கல்லூரிகளில் இருந்து 994 இடங்கள், அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்கும். இதன்படி, 1,290 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் ஜூலை 14ல் துவங்கி, 30ம் தேதி வரை நடந்தது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற ஜூலை 31ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த நாளுக்குள், 3,768 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி, 1,290 இடங்களுக்கு, 3,768 பேர் போட்டியில் உள்ளனர். தாமதமின்றி கலந்தாய்வை துவங்க வேண்டும் என இவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரி ஒருவர் கூறுகையில், கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலின் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி, ஒரு வாரத்திற்குள் கிடைக்கும் என நம்புகிறோம். இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாதத் துவக்கத்திலோ கலந்தாய்வை துவங்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டால், இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.பி.எஸ்., படிப்புகளில் பொதுப்பிரிவினர் பாதிக்கப்படுவதாகக் கூறி, அக்ஷயா, ஹரிணி உள்ளிட்ட 4 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், தற்போதைய நிலையில், இந்த வழக்கை அரசியல் சாசன பிரிவுக்கு மாற்ற முடியாது என்றும், இதுகுறித்து மாணவர்கள் 2 வாரத்திற்குள்ளாகவும், தமிழக அரசு 4 வாரத்திற்குள்ளாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, இன்று முதல், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடக்கிறது.

இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு,  இன்று  முதல், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடக்கிறது. தமிழ்நாடு மீன்வள பல்கலை சார்பில், இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று காலை 9:00 மணி முதல் துவங்குகிறது.இதற்கான, பல்கலை நிர்ணயித்த கட் - ஆப் மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், மீன்வளப் பல்கலையின், www.tnfu.org.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்கள், கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு, அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.அழைப்புக் கடிதம் கிடைக்காவிட்டாலும், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருந்தால், தக்க சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கு பெறலாம்.