முதுகலை ஆசிரியர் தேர்வில் (டி.ஆர்.பி.,) பின்பற்றும் முறையை, ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) பின்பற்றாததால், பழைய பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுத வேண்டும் என 2012ல் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழை, ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஏழு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என அறிவித்தது.அதன்படி, ஆசிரியர் தேர்வாணையம் 2012 ஜூலையில் நடத்திய டி.இ.டி., தேர்வில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது 150 வினாக்களுக்கு ஒன்றரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கியதால் தேர்ச்சி சதவீதம் குறைந்தது. அதில் முதல் தாளில் 1,735 பேரும், 2ம் தாளில் 713 பேரும் தேர்ச்சி பெற்றனர்.தேர்வுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்வு, மூன்று மணி நேரமாக மாற்றப்பட்டது.அதில் முதல் தாளில், 10 ஆயிரத்து 397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும் தேர்ச்சி பெற்றனர். அனைவரும் 2012 டிசம்பரில் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2013 ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் அடிப்படையில் 32 ஆயிரம் பேர், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு அறிவித்த 5 சதவீத மதிப்பெண் அடிப்படையில் 44 ஆயிரம் பேர் என மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.ஆனால் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பிளஸ் 2, டிகிரி, பி.எட்.,ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 40 மதிப்பெண்ணும், டி.இ.டி.,யில் 60 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 100 மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதனால் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், முதுகலை ஆசிரியர் தேர்வில், இதுபோன்று மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், டி.ஆர்.பி., தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது.2008-09ம் கல்வியாண்டில், கல்லூரிகளில் திறனறித் தேர்விற்கு 25 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என புதிய நடைமுறை வந்தது. அதன்பிறகு டிகிரி படித்த மாணவர்கள் சாதாரணமாக 70 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெறுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெறுவதே கடினமாக இருந்தது. இதனால், வெயிட்டேஜ் முறையைப் பின்பற்றுவதன் மூலம், பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கு ஆசிரியர் பணி கிடைப்பது அரிதாகியுள்ளது.2013ல் டி.இ.டி., தேர்வில் 82 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலையில், 101 மதிப்பெண் பெற்ற, விருத்தாசலம் பகுதியில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதிய மாணவர் ஒருவர், வெயிட்டேஜ் முறையால் ஆசிரியர் பணிக்கு தேர்வாகவில்லை.அவர் கூறுகையில்,  "2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், இரண்டாம் தாளில் 101 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் புதிய வெயிட்டேஜ் முறைபடி 65.15 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றதால் ஆசிரியர் தேர்வு பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. புதிய வெயிட்டேஜ் முறையால் 90லிருந்து 100க்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்த பழைய பாடத்திட்ட மாணவர்கள் பலர் ஆசிரியர் பணிக்குத் தேர்வாகாமல் உள்ளனர்" என்றார்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

 அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா? என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.தமிழகத்தில், கடந்த 2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில் ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம், பிற நலத்திட்டங்கள் போன்றவை கிடைக்கின்றன. அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழிக்கல்வி முறை மட்டுமே அமலில் உள்ளது. அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி துவங்கப்பட்டு வருவதுபோல், அரசு உதவிபெறும் பள்ளியிலும், ஆங்கிலவழிக் கல்வி துவங்க அனுமதிக்க வேண்டும்.ஆங்கிலவழிக் கல்வியை போதிக்கும் அரசு பள்ளிகளுக்கு வழங்கும் சலுகைகளை, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும் என, அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அரசு தரப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கோ அல்லது தனியார் பள்ளிகளுக்கோ, புதியதாக எந்த சலுகையும் வழங்க முடியாது என, அரசு தெரிவித்துள்ளதாக கூறும் கல்வியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 5,071 தொடக்கப் பள்ளிகள், 1,608 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் 40,748 ஆசிரியர்கள்; 14 லட்சத்து 23 ஆயிரத்து 615 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மட்டுமல்லாது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன. அரசு பள்ளியை போலவே, அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை வழங்க, கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்படுகிறது.ஆங்கில வழிக்கல்வி தேவை என அவர்கள் விருப்பப்பட்டால், சுயநிதி பள்ளியாக மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். கடந்த 1990 - 91ம் ஆண்டுக்கு முன், அரசு உதவி பெறும் பள்ளிகளில் என்ன நடைமுறை இருந்ததோ, அதே நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும் என, அன்றே உத்தரவிடப்பட்டது. தனியார் சார்ந்த கல்வி முறையை, அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை. மேலும், அரசு பள்ளிகளே, தற்போது தேவையான வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2008–2011–ம் வருட காலத்தில் தேர்ச்சி சதவீதம் 72 ஆக இருந்தது. அது 2010–2013–ம் ஆண்டு மார்ச் மாத காலத்தில் 47 ஆக குறைந்துள்ளது என்று இந்திய தணிக்கை துறை அறிவித்துள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் தொழில்நுட்ப கல்வி என்ஜினீயரிங் கல்லூரிகளிலும், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். ஆனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடக்கிறது.
தொழில்நுட்ப கல்விக்காக 11–வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.241 கோடியே 60 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதில் பாலிடெக்னிக் கல்லூரிகளின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.14 கோடியே 78 லட்சம் ஒதுக்கப்பட்டது.
மாணவர் சேர்க்கையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 முதல் 11 சதவீதம் வரையிலும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 6 முதல் 15 சதவீதமும் குறைவாகவும் இருந்தது. மாதிரி ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தன. அதுபோல விடுதியில் தங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிக மாணவர்கள் தங்கி இருந்தனர். அதாவது 74 சதவீத மாணவர்கள் அதிகமாகவும், 94 சதவீத மாணவிகள் கூடுதலாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
தேர்ச்சி சதவீதம் குறைந்தது
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி வீதம் 2008–2011–ம் ஆண்டுகளில் 72 சதவீதமாக இருந்தது. ஆனால் அந்த சதவீதம் 2010–2013–ம் ஆண்டு 47 சதவீதமாக குறைந்துள்ளது (25 சதவீதம் குறைந்துள்ளது). 7 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 154 ஆய்வகங்களுக்கு பதிலாக 104 ஆய்வகங்கள் மட்டுமே இருந்தன. அதாவது 49 ஆய்வகங்கள் குறைவாக இருந்தன.
இந்த தகவலை இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தெரிவித்துள்ளது.