தமிழகத்தில் 17 அரசு நர்சிங் கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாததால், செயல்பாடுகளில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17 அரசு நர்சிங் கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக நிரப்பப்படாததால், செயல்பாடுகளில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. அரசு, இதில் கவனம் செலுத்தவில்லையே என மாணவர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில் 23 அரசு நர்சிங் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆண்டுதோறும் 3,000 பேர் படிக்கின்றனர். 23 கல்லுாரிகளில், தற்போது ஆறு கல்லுாரிகளில் மட்டுமே முதல்வர்கள் உள்ளனர். மீதமுள்ள 17 கல்லுாரிகளில், முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளன.
இதனால், தேவையானவற்றை தீர்மானித்தல், முக்கிய முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலான கல்லுாரிகளில், நிர்வாகப் பணிகளை துணை முதல்வர், மூத்த ஆசிரியர்கள் செய்வதால், அவர்களின் வழக்கமான பணிகள், கல்வி போதிக்கும் பணிகளும் பாதிக்கும் சூழல் உள்ளது.
அரசு ஏனோ, இந்த கல்லுாரிகள் மீது போதிய கவனம் செலுத்தவில்லை. டிப்ளமோ நர்சிங் கலந்தாய்வு, அடுத்த வாரம் துவங்குகிறது. விரைவில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் நிலையில், இனியாவது காலியாக உள்ள முதல்வர் இடங்களை நிரப்ப வேண்டும் என நர்சிங் மாணவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
சுகாதாரத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "முதல்வர் இல்லாத நர்சிங் கல்லுாரிகளை, துணை முதல்வர்கள் கண்காணித்து வருகின்றனர். காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களை நிரப்ப, தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்து, அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது" என்றார்.

புதியதாக நியமிக்கப்படும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், வரும் செப்., 8 ம் தேதி பணியில் சேர, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

புதியதாக நியமிக்கப்படும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், வரும் செப்., 8 ம் தேதி பணியில் சேர, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக் கல்வித்துறையில் 1,649 இடைநிலை ஆசிரியர், 167 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான
கலந்தாய்வு செப்., 1 முதல் செப்., 4 வரை நடக்கிறது.

கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரடி மேற்பார்வையில் கலந்தாய்வு நடத்த வேண்டும். கலந்தாய்வு முடியும் வரை, மாவட்ட தலைமையை விட்டு அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது. கலந்தாய்வுக்கு வருபவர்களிடம், கனிவான அணுகுமுறையை கையாள வேண்டும். ஆசிரியர்கள், கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்தவுடன், ஒதுக்கீட்டு ஆணையை உடனே பிரின்ட் எடுத்து கொடுக்க வேண்டும்.
கலந்தாய்வு நடக்கும்போது, மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இல்லாத பட்சத்தில், அதை காத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த வேண்டும். பணியிட ஒதுக்கீடு பெற்றவர்கள், ஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிட்டுள்ள, ஆவணங்களுடன் செப்.,4 முதல் 6 ம் தேதிக்குள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் பணி நியமன ஆணை பெற்று, செப்.,8 ல் பணியில் சேர்ந்திட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
பணி நியமன ஆணை வழங்கும் முன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் சான்றிதழ்களை முறையாக சரிபார்க்க வேண்டும். பின்னாளில் ஏதேனும் குறை நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருமே பொறுப்பு ஏற்க நேரிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று(செப்டம்பர் 1) துவங்குகின்றன.

அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று(செப்டம்பர் 1) துவங்குகின்றன. எதிர்கால கனவுகளோடு, மாணவர்கள் கல்லுாரிகளில் அடியெடுத்து வைக்கின்றனர். தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லுாரியும் உள்ளன.
கலந்தாய்வு: இதில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள், 100 பி.டி.எஸ்., (பல் மருத்துவம்) இடங்களும் உள்ளன. இந்த ஆண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் முடிந்தன. அனைத்து இடங்களும் நிரம்பின.
இடஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர் கல்லுாரிகளில் மருத்துவக் கல்வி இயக்கக வழிகாட்டுதல்படி சேர்ந்தாலும், அரசு அறிவிப்பின்படி, முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., வகுப்புகள், முறைப்படி இன்று துவங்குகின்றன. கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையில், இடஒதுக்கீடு பெற்ற மாணவ, மாணவியர், சிறந்த டாக்டர்களாகும் எதிர்கால கனவுகளோடு, இன்று கல்லுாரி வகுப்புகளில் அடி எடுத்து வைக்கின்றனர். அவர்களை, மூத்த மாணவர்களும் வரவேற்று, உற்சாகப்படுத்த தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம், சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

மாணவ, மாணவியர், ஜீன்ஸ் பேன்ட், டி - சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது.
மாணவியர் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும். தலைமுடியை விரித்து விட்டபடி வராமல், இறுக்கமாக கட்டிக்கொண்டு வகுப்புக்கு வரவேண்டும்.
மாணவர்கள் பேன்ட், முழுக்கை சட்டை அணிந்து, இன் செய்து கொண்டும், ஷூ அணிந்தும் வர வேண்டும். ஜீன்ஸ், டி - சர்ட் அணிந்து வருவோருக்கு வகுப்புகளில் அனுமதி இல்லை.
டாக்டருக்கு படிக்க வருவோர், கண்ணியமான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதால், இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
எச்சரிக்கை: இதுதவிர, ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. ராகிங் புகாரில் சிக்கினால், கல்லுாரியை விட்டு நீக்கப்படுவர் எனவும், எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை சிக்கலின்றி முடிந்தது. சுயநிதி கல்லுாரிகளில், ஐந்து கல்லுாரிகளில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்ததால், 700 எம்.பி.பி.எஸ்., இடங்கள் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.