25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 
கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.  ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 
நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் . இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு,
நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.  உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்
வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் 
தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 

இன்று காலை 9 மணிமுதல் , கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்

கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று காலை 9 மணிமுதல் சென்னையில் நடைபெறுகிறது. மொத்தம் 3 நாட்கள் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 30ம் தேதி காலை 9 மணி முதல்:
BVSc & AH படிப்பில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங்
காலை 11 மணிமுதல்:
BVSc & AH படிப்பிற்கு, பள்ளிப் படிப்பில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கான கவுன்சிலிங். மாணவர்களின் இனப்பிரிவு கட்-ஆப் மதிப்பெண் வாரியாக இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 31ம் தேதி:
BVSc & AH படிப்புகளுக்கு, பள்ளி படிப்பில் அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங். இது முதல் batch கவுன்சிலிங் ஆகும். இங்கும், இனப்பிரிவுக்கேற்ற கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்படும்.
மதியம் 2 மணிமுதல்: அதே அகடமிக் பிரிவு மாணவர்களுக்கு, BVSc & AH படிப்பிற்கான, இரண்டாம் batch கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதி:
காலை 9 மணிக்கு:  பி.டெக்., உணவு தொழில்நுட்பம் மற்றும் பி.டெக்., கோழி வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
 காலை 11 மணிமுதல்: மேற்கூறிய இரண்டு படிப்புகளுக்கும், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடைபெறும்.
விரிவான விபரங்களை அறிய : http://www.tanuvas.tn.nic.in/ugadmission/counselling.html.

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.கல்வித்துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலை வகுப்பில், மாணவர் இடைநிற்றல் 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடுநிலை வகுப்புகளில், 2001 - 02ல், 13 சதவீதமாக இருந்த இடைநிற்றல், 2013 - 14ல், 1.65 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆரம்ப, நடுநிலை வகுப்புகளில், மாணவர் சேர்க்கை 99 சதவீதமாக இருப்பதாகவும், கல்வித் துறை தெரிவித்துள்ளது."மாணவர்களுக்கு, இலவச நோட்டு புத்தகம், பாடப் புத்தகம், இலவச சைக்கிள், லேப் - டாப் உட்பட, 14 வகையான இலவச திட்டங்கள் வழங்கப்படுவதால், மாணவர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இதன் காரணமாக, கிராமப்புறங்களில், பள்ளி இடைநிற்றல் அளவு கணிசமாக குறைந்துவிட்டது" என கல்வித் துறை வட்டாரம் கூறுகிறது.இதுகுறித்து, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: இடைநிற்றல் குறித்தும், முழுமையான அளவில், அனைத்து குழந்தைகளும் பள்ளிகளில் சேர்ந்தார்களா என்பது குறித்தும், கல்வித்துறை அல்லாத பிற அமைப்புகளிடம் முழுமையான புள்ளி விவரம் இருக்கிறதா என தெரியவில்லை.இடைநிற்றல் விகிதம் குறைந்திருப்பது சரியாக இருக்கலாம். ஆனால், பள்ளி சேராத தெருவாழ் சிறார்கள், இன்றும் அதிகளவில் இருக்கின்றனர். சென்னையிலேயே பல குடிசை பகுதிகள் உள்ளன. அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கின்றனர் என்பதை உறுதியாக கூற முடியாது.எனவே, தெருவாழ் சிறுவர்கள், குடிசை பகுதிகளில் வாழும் சிறுவர்கள் மற்றும் பிழைப்பிற்காக, ஒரு பகுதியில் இருந்து, மற்றொரு பகுதிக்கு குடியேறிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆகிய அனைவரையும், ஆரம்பப் பள்ளிகளில் சேர்ப்பதை, கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும்.அத்துடன், அவர்கள், தொடர்ந்து கல்வி கற்பதையும் கண்காணிக்க வேண்டும். இதை செய்தால்தான், மாணவர் சேர்க்கையில் 100 சதவீதத்தை எட்ட முடியும். இவ்வாறு பிரின்ஸ் தெரிவித்தார்