தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சட்டசபையில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: மாநிலத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 163 புதிய படிப்புகள் தொடங்கப்படும். இதில், 62 எம்.பில்., படிப்புகளும், 52 பிஎச்.டி., படிப்புகளும் அடக்கம்.மேலும், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகள் அளவில், பல புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். கடந்த 2011ம் ஆண்டில் எனது அரசு பொறுப்பேற்றதிலிருந்து, உயர்கல்வியில் புதிதாக 797 படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம், மாணவர்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் 38.2% என்ற அளவிற்கு அதிகரித்தது.பல்வேறு அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,100 காலி ஆசிரியப் பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக பூர்த்தி செய்யப்படும். சென்னையில் இயங்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், புறநகர் பகுதியான காரப்பாக்கத்திற்கு மாற்றப்படும். அங்கே, அதற்காக, ரூ.95 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் மயிலாடுதுறையில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.