தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல் இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

தமிழகத்தில் நடக்கும் ஆசிரியர் தின விழா பெயரில், எவ்வித மாற்றமும் கிடையாது; வழக்கம்போல் இந்த ஆண்டும், ஆசிரியர் தின விழா, வரும் 5ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5ம் தேதி, தேசிய அளவில், ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக பணிபுரியும் ஆசிரியருக்கு, மத்திய, மாநில அரசுகள், விருதுகளை வழங்குகின்றன.
இந்நிலையில், ஆசிரியர் தின விழா பெயரை, சமீபத்தில் குரு உத்சவ் என மாற்றி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. மாநில அரசுகளும், புதிய பெயரில் விழாவை கொண்டாட வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வரும் 5ம் தேதி மாநில அரசுகளும், மத்திய அரசும், சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்க உள்ளது. தமிழகத்திலும், விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், பெயர் மாற்றம் தமிழகத்தில் அமலுக்கு வருமா? என்பது குறித்து, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்ததாவது: பெயர் மாற்றம் குறித்து, தமிழக அரசு, கல்வித் துறைக்கு எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, வழக்கம்போல் தான், விழா நடக்கும்.
வரும் 5ம் தேதி சென்னை, சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் விழாவில், 377 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. பள்ளிகல்வி அமைச்சர் வீரமணி, விருதுகளை வழங்குகிறார். இவ்வாறு கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) தெரிவித்தது.
முதலில், 1,060 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் செய்தது. இதற்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். தகுதியானவர்களுக்கு, சமீபத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, அதன்பின், நேர்முகத் தேர்வையும் நடத்தியது.
இந்நிலையில், மொத்த காலி பணி இடங்கள் எண்ணிக்கை 2,000 ஆக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், "2,000 உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர் பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்" என தெரிவித்தார்.

மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை செயல்பாட்டைத் துவக்கியது.

மறுநிர்மாணம் செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம், செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பறை செயல்பாட்டைத் துவக்கியது.
தற்போதைக்கு, ஸ்கூல் ஆப் எகாலஜி அன்ட் என்விரன்மென்டல் ஸ்டடீஸ் மற்றும் ஸ்கூல் ஆப் ஹிஸ்டாரிகல் ஸ்டடீஸ் ஆகிய துறைகளில், சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
மேலும், இப்போது, பல்கலை வளாகத்தில் 15 மாணவர்களும், 11 ஆசிரியர்களும் உள்ளனர் என்று நாளந்தா பல்கலை துணைவேந்தர் கோபா சபர்வால் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: தொடக்கத்தில் சாதாரண முறையில் வகுப்புகள் துவக்கப்படுவதற்கு காரணம், ஆசிரியர்களும், மாணவர்களும் புதிய சூழலில் பழகிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இப்பல்கலைக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வரும் செப்டம்பர் 14ம் தேதி வருகைத்தர உள்ளார்.
அப்போது பெரியளவிலான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பல்கலையில் அனைத்து அம்சங்களும் ஒழுங்குபட்டிருக்கும் மற்றும் மீடியா கவனமும் எங்கள் மீது அதிகரித்திருக்கும்.
ஆகஸ்ட் 31ம் தேதி, மாணவர்களின் 3 நாள் ஓரியன்டேஷன் நிகழ்ச்சியை பல்கலைக்கழகம் நிறைவு செய்தது. உலகின் 40 நாடுகளிலிருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில், சேர்க்கைக்காக இப்பல்கலைக்கு விண்ணப்பித்தனர். ஆனால், அவர்களில், 15 பேர் மட்டுமே (ஜப்பான் மற்றும் பூடானிலிருந்து தலா ஒருவர்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இப்பல்கலை வளாகம் அமைந்த ராஜ்கிர் என்ற இடம், பீகாரில் அமைந்துள்ள புத்தகயா என்ற பெளத்த புனித ஸ்தலத்திற்கு அடுத்து, இரண்டாவது பெளத்த மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இப்பல்கலைக்கு, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகள் பல்வேறான நிதியுதவியை அளித்துள்ளன மற்றும் அளிக்கவுள்ளன.
இதோடு சேர்த்து, இந்திய அரசாங்கம், 10 ஆண்டு காலகட்டத்திற்கு, ரூ.2,700 கோடியை ஒதுக்கியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.