அரசு பொதுத்தேர்வுகளில் புதிய முறையில் கேள்வித்தாள்: தமிழக அரசுக்குப் பரிந்துரை


 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக்கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதேநேரத்தில் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்வி கேட்க வேண்டும் என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
சீர்திருத்தம் குறித்து ஆய்வு: பொதுத்தேர்வு விதிமுறைகள் மற்றும் கேள்வித்தாளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஆய்வுசெய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் தலைவர், பாலசுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், கல்வித்துறை இயக்குனர்கள் உட்பட பலர் இடம்பெற்று உள்ளனர்.
செய்ய வேண்டிய சீர்திருத்தம் குறித்து, ஏற்கனவே பல கூட்டங்களை நடத்தி, வரைவு அறிக்கை மற்றும் பரிந்துரை அறிக்கையை, பாலசுப்ரமணியன் குழு தயாரித்து, தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. கோப்பு, முதல்வரிடம் செல்வதற்கு முன், இயக்குனர்கள் பார்வைக்கு வரைவு அறிக்கையை சமர்ப்பித்து, தேவையான ஆலோசனையை பெற வேண்டும் என, குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.
வரைவு அறிக்கை விவரம்: அதன்படி, அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், மெட்ரிக் கல்வி இயக்குனர் பிச்சை ஆகியோருக்கு, வரைவு அறிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து துறை வட்டாரம் கூறியதாவது: பூஜா குல்கர்னி மட்டும், அறிக்கையின் விவரங்களை முழுமையாக படிக்க வேண்டும், எனவே சில நாட்கள் கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டார். எனவே, ஒரு வாரத்திற்குப் பின், மாற்று கருத்து இருந்தால் அதுகுறித்து ஆலோசித்து, வரைவு அறிக்கையில் சேர்க்கப்படும்.
தேர்வு சீர்திருத்தக் குழு, 100 பக்க வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது. அதில் பரிந்துரைகள் மட்டும் 10 பக்கங்களில் இடம் பெற்றுள்ளன. பொதுத்தேர்வுக்கான விதிகள், அரசாணைகள், தற்போது தனித்தனியாக உள்ளன. இப்படி இல்லாமல், அனைத்து விதிகள், அரசாணைகளை பரிசீலனை செய்து, தேவையானவற்றை மட்டும் ஒருங்கிணைத்து, தேர்வுக்கான சட்ட விதிமுறைகளாக தொகுத்து வெளியிட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே, ஈ அடிச்சான் காப்பி போல், பொதுத்தேர்வுகளில் கேட்கக்கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில் வெளியில் இருந்து, கேள்விகளை கேட்க வேண்டும்; மாணவர்களின் அறிவை சோதிக்கும் வகையில், கேள்விகள் இருக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு, தமிழக அரசு விரைவில் ஒப்புதல் அளித்ததும், அடுத்த கல்வி ஆண்டில் (2015 - 16) இருந்து, சீர்திருத்த விதிமுறைகள் அமலுக்கு வரும். இவ்வாறு துறை வட்டாரம் தெரிவித்தது.

அங்கீகாரமற்ற படிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்: யு.ஜி.சி. அறிவுறுத்தல்

 அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் கல்வி மையங்கள் என்ற பெயரில், செயல்படும் நிறுவனங்கள், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்துவதால், அவற்றை நம்ப வேண்டாம் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகள், கல்லூரிகள் என, எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம், பாடங்களுக்கான அனுமதி என அனைத்தும் யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.
நாடு முழுவதும் செயல்படும், பல்கலைகள், அவை அனுமதி பெற்றுள்ள வரம்பிற்குள் மட்டுமே, கல்வி வளாகங்கள், கல்வி மையங்களை அமைக்க முடியும். வரம்பை தாண்டி கல்வி மையங்களை அமைக்கக் கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
மேலும், அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் அங்கீகாரம் பெற்ற மையங்கள் என செயல்படும் சிறிய கல்வி மையங்கள் பல, அனுமதி பெறாத பல படிப்புகளை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. இப்புகார்கள் அடிப்படையில், கடந்தாண்டு ஜூலை 12ம் தேதி, இதுகுறித்த பொது அறிவிப்பு ஒன்றை யு.ஜி.சி., வெளியிட்டது.
இந்த நிலையில், அங்கீகாரம் இல்லாத கல்வி மையங்கள், வளாக மையங்கள் சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதை யு.ஜி.சி., கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து, மீண்டும் அதே பொது அறிவிப்பை யு.ஜி.சி., வெளியிட்டு, இதுபோன்ற அங்கீகாரம் பெறாத கல்வி மையங்களில் சேர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி இல்லாததால் பாதிக்கப்படும் மாணவர்கள்; வீணாகும் லேப்டாப்

தொடக்கக் கல்வித்துறையின்கீழ், மாநிலம் முழுவதும் கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் சார்ந்த நவீன பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தால், பயனற்று பள்ளிகளில் வீணாகி வருகிறது.
தொடக்கல்வித்துறைக்கு உட்பட்ட 8,026 நடுநிலைப் பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பிலும், பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. இன்றைய உலகில் அனைத்து செயல்பாடுகளும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளது என்பதை உணர்ந்த பள்ளிக்கல்வித்துறை, கனெக்டிவ் கிளாஸ் ரூம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் உட்பட பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.
இதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தபட்சம் வாரத்தில் ஐந்து பாடவேளைகள் கற்பித்தலுக்கு, லேப்டாப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியை மேற்கொள்வதை முறையாக, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேற்பார்வையில், கண்காணிக்கவும், உணவு இடைவேளைக்கு முன்பு அல்லது பின்பு வகுப்புகளை கம்ப்யூட்டர் வழி கற்பித்தல் முறைக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான தொகுப்புகளும் வழங்கப்பட்டன.
லேப்டாப் சார்ந்த அடிப்படை பயிற்சிகள் இல்லாத பெரும்பாலான ஆசிரியர்கள், கற்பித்தல் பணிக்கு லேப்டாப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களும் தொழில்நுட்பம் சார்நத அறிவை தொடக்க நிலைகளில் பெற இயலாமல், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சமயங்களில் சிரமப்படும் சூழல்கள் உருவாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில், 244 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சில பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகளில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வெறும் அலங்கார பொருட்களாகவே வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறுகையில், "கற்பித்தல் பணிக்கு, லேப்டாப் பயன்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளி தலைமையாசிரியர்களிடம் தொடர்ந்து இதுகுறித்து அறிவுறுத்தப்படுவதுடன், நடுநிலைப் பள்ளிகளில் மூன்று அல்லது நான்கு லேப்டாப் இருக்கும் பட்சத்தில், தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று வழங்குமாறும் தெரிவித்துள்ளோம். உதவி தொடக்க கல்வி அலுவலர் மூலம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.