கால்நடை மருத்துவ கலந்தாய்வில் ஆர்வத்துடன் மாணவர்கள் பங்கேற்பு கடந்த ஆண்டை விட கட் ஆப் மதிப்பெண் 2 அதிகரித்தது

கால்நடை மருத்துவ பொது கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ–மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
பொது கலந்தாய்வு
தமிழ்நாடு கால்நடை மருத்துவப்பல்கலைக்கழகம் சார்பில் சென்னை வேப்பேரியிலும், நாமக்கல்லிலும் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் உள்ள பி.வி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் கால்நடை மருத்துவ படிப்பில் சேர மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்கல்வி படித்த மாணவ–மாணவிகளுக்கு கலந்தாய்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. நேற்று பொது கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் ஏராளமான மாணவ–மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.
முதல் மாணவர்
முதல் மாணவராக நாமக்கல்லைச் சேர்ந்த வி.சரண்குமார் நாமக்கல் கால்நடைமருத்துவ கல்லூரியை தேர்ந்து எடுத்தார். அவர் எடுத்த கட் ஆப் மார்க் 198.25 இதே கட் ஆப் மதிப்பெண்ணில் இவரைத் தொடர்ந்து 4 பேர் எடுத்துள்ளனர். 2–வது மாணவர் எம்.கமலக்கண்ணன் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். 3–வது மாணவர் எஸ்.மனோஜ் பிரபு நாமக்கல்லைச் சேர்ந்தவர். 4–வது இடம் பிடித்த மாணவி வி.அருள் மொழி தர்மபுரியைச் சேர்ந்தவர். 5–வது இடம் பெற்ற மாணவர் எம்.எஸ்.அஸ்வந்த் கோவையைச் சேர்ந்தவர்.
இந்த 4 பேர்களும் சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியை தேர்ந்து எடுத்தனர்.
கட் ஆப் அதிகரிப்பு
இவர்களுக்கு அடுத்தபடியாக 198 கட் ஆப் மார்க் பெற்ற 23 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் நாமக்கல் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும், 14 பேர் வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்தனர்.
நேற்று 219 இடங்களுக்கு 982 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் சில மாணவ–மாணவிகள் வரவில்லை. கடந்த ஆண்டு கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு கட் ஆப் மார்க் இருந்ததை விட இந்த ஆண்டு கட் ஆப் மார்க் 2 உயர்ந்து உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த வருடம் கால்நடை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவ–மாணவிகளிடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று கலந்தாய்வு
இன்று (வெள்ளிக்கிழமை) உணவு தொழில்நுட்பம் படிப்பில் சேர 40 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 128 குடியிருப்புப் பகுதிகளில் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 
கல்வியின் அடித்தளமாக விளங்குவது தொடக்கக் கல்வி என்பதைக் கருத்தில் கொண்டு, நடப்புக் கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்புப் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதிகளில், தலா ஒரு தொடக்கப் பள்ளி வீதம் 128 புதிய தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும்.  ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள். 
நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக, நிலை உயர்த்தப்படும் . இவ்வாறு நிலை உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுவதோடு,
நடப்புக் கல்வியாண்டில், 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும்.  உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் என மொத்தம் 300 ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
நடப்புக் கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இவ்வாறு நிலை உயர்த்தப்படும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்
வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவியர், ஒவ்வொருவருக்கும் 50,000 ரூபாய் நிதி வழங்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தத் தொகை இனி 75,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் 
தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில், நடப்பாண்டில், 500 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 5 உண்டு உறைவிடப் பள்ளிகள் நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பள்ளிகளுக்கு 5 முழு நேர ஆசிரியர்கள் மற்றும் 3 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 

இன்று காலை 9 மணிமுதல் , கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்

கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று காலை 9 மணிமுதல் சென்னையில் நடைபெறுகிறது. மொத்தம் 3 நாட்கள் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 30ம் தேதி காலை 9 மணி முதல்:
BVSc & AH படிப்பில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங்
காலை 11 மணிமுதல்:
BVSc & AH படிப்பிற்கு, பள்ளிப் படிப்பில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கான கவுன்சிலிங். மாணவர்களின் இனப்பிரிவு கட்-ஆப் மதிப்பெண் வாரியாக இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 31ம் தேதி:
BVSc & AH படிப்புகளுக்கு, பள்ளி படிப்பில் அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங். இது முதல் batch கவுன்சிலிங் ஆகும். இங்கும், இனப்பிரிவுக்கேற்ற கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்படும்.
மதியம் 2 மணிமுதல்: அதே அகடமிக் பிரிவு மாணவர்களுக்கு, BVSc & AH படிப்பிற்கான, இரண்டாம் batch கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதி:
காலை 9 மணிக்கு:  பி.டெக்., உணவு தொழில்நுட்பம் மற்றும் பி.டெக்., கோழி வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
 காலை 11 மணிமுதல்: மேற்கூறிய இரண்டு படிப்புகளுக்கும், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடைபெறும்.
விரிவான விபரங்களை அறிய : http://www.tanuvas.tn.nic.in/ugadmission/counselling.html.