ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர் 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர் 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர் 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர் 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில் தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணையை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வுபெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால் பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதன்பின் தற்போதுதான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில் நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.2,000 இடைநிலை ஆசிரியர் பணி அறிவிப்பு இன்று வெளியாகிறது: இட ஒதுக்கீடு வாரியாக, 2,000 இடைநிலை ஆசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிடுகிறது. ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண் அடிப்படையில், 2,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆனால், எந்தெந்த பிரிவில், எத்தனை பணியிடம் நிரப்பப்பட உள்ளது என்ற அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து, வரும் 28ம் தேதிக்குள், 2,000 பேரின் தேர்வு பட்டியல், www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.