"பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்" என கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்

"பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி, விரைவில் துவங்கும்" என கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு தெரிவித்தார்.தனியார் பள்ளிகளுக்கு, கட்டணம் நிர்ணயம் செய்வதற்காக, தமிழக அரசு, கட்டண நிர்ணய குழுவை அமைத்துள்ளது. இக்குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயிக்கிறது.கடந்த, 2012 - 13ல் இருந்து, நடப்பு கல்வி ஆண்டுடன், மூன்று ஆண்டை நிறைவு செய்யும் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய, கட்டண நிர்ணய குழு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்காரவேலு நிருபர்களிடம் கூறியதாவது:பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு, 2015 - 16, 16 - 17, 17 - 18 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணி விரைவில் துவங்கும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 பள்ளிகள், குழு நிர்ணயித்தகட்டணத்தை விட, அதிக கட்டணம் வசூலித்ததாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். பெற்றோர் - பள்ளி நிர்வாகம் இடையே அதிக கட்டணம் வசூலிப்பு தொடர்பாக நடந்த உரையாடலை அவர்களுக்கு தெரியாமல் ஒருவர், வீடியோ எடுத்து அதை சிடி -யாக, குழுவிடம் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து, விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சிங்காரவேலு தெரிவித்தார்.1.5 கோடி திருப்பி தர உத்தரவு : குழு நிர்ணயம் கட்டணத்தை பெரும்பாலான தனியார் பள்ளிகள்வசூலிப்பதில்லை. கூடுதல் கட்டணத்தைதான் வசூலிக்கின்றன. இதில், ஒரு சில பள்ளிகள் மீதுதான் எழுத்துப்பூர்வமாக, குழுவிற்கு புகார் வருகின்றன. இந்த புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்தி, அதிக கட்டணம் வசூலித்தது நிருபணமானால், கூடுதல் கட்டணத்தை திருப்பி தரவும் குழு உத்தரவிடுகிறது.அதன்படி சென்னை, பெரம்பூரில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, குழு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலித்தது குறித்து, குழுவிற்கு புகார் வந்தது. விசாரணையில், புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம், கூடுதலாக வசூலித்த 1.5 கோடி ரூபாயை, உடனடியாக திருப்பி தர வேண்டும் என சிங்காரவேலு உத்தரவிட்டுள்ளார்.